×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ஐஜி முருகன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்: விரைவில் விசாரணை

சென்னை: ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன் (59). இவர் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அவருடன் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். கடந்த 2017 ஜூலை முதல் 2018 ஆகஸ்ட் வரை பலமுறை தனக்கு ஐ.ஜி., முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி 2018ல் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் மீது விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. ஆனால், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்ற உயர் நீதிமன்றம் தெலங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியது. தெலங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.ஜி.முருகன் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டை ஏற்று தமிழ்நாட்டிலேயே வழக்கை நடத்த உச்ச நீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்தது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் அதிகாரி, 3 போலீஸ் அதிகாரிகள், டிரைவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால், இறுதி அறிக்கை எதையும் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் ஐ.ஜி முருகன், ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்குமாறு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதினர். இதையடுத்து, முருகன் மீது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க ஆளுநர் அலுவலகமும், தமிழ்நாடு அரசும் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஐ.ஜி முருகன் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டிரைவர்கள் உள்பட 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அவர்களின் வாக்குமூலங்கள் உள்பட ஆவணங்களுடன் 112 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ஐஜி முருகன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்: விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Egmore ,court ,IG ,Murugan ,CHENNAI ,Erode Task Force IG ,
× RELATED தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல்...